மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸான கிம்மா, பாரிசான் நேஷனலின் முழு உறுப்புக் கட்சியாக இணைப்பதற்கு ஏதுவாக, கூட்டணியின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற கிம்மாவின் 46-வது பொதுக்கூட்டத்தைத் திறந்து வைத்துப் பேசிய துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட், பாரிசான் நேஷனல் கூட்டணியில் ஒரு புதிய கட்சியை இணைக்க அனைத்து உறுப்புக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
கிம்மாவை உறுப்பினராகச் சேர்ப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஊடகங்களில் கூறும் கட்சிகள், அதனை பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
"ஊடகங்களில் ஒரு நிலைப்பாட்டையும், கூட்டங்களில் வேறொரு நிலைப்பாட்டையும் எடுப்பதை நான் விரும்பவில்லை" என ஜாஹித் ஹமிடி பாரிசான் நேஷனலில் உள்ள சில உறுப்புக் கட்சிகளைச் சாடினார்.
பாரிசான் நேஷனல் அரசியலமைப்பில் திருத்தம் செய்து, கிம்மாவை முழு உறுப்பினராக இணைப்பதற்கான தீர்மானத்தை அடுத்த உச்சமன்றக் கூட்டத்தில் தாமே முன்மொழியப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
தற்போது பாரிசான் நேஷனல் தோழமை பிரிவில் இருக்கும் கிம்மா, நீண்டகாலமாக முழு உறுப்பினர் அந்தஸ்தைக் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.








