ஷா ஆலாம், நவ. 21-
சிலாங்கூர் மாநிலத்தில் 1,700 வெள்ளி குறைந்த பட்ச சம்பள முறை அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று மாநில மனித வள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு அறிவித்துள்ளார்.
1,700 வெள்ளி குறைந்த பட்ச சம்பள முறை, மத்திய அரசாங்கம் அளவில் அமல்படுத்தப்படும் முறைக்கு ஏற்ப சிலாங்கூர் மாநிலத்தின் அமலாக்கமும் அமைந்து இருக்கும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் புதிய குறைந்த பட்ச சம்பள முறை அமல்படுத்தப்பட்டதும், அந்த நடைமுறையை முதலாளிமார்கள் அனுசரிப்பதை உறுதி செய்வதற்கு ஆள்பல இலாகாவின் ஒத்துழைப்புடன் சட்ட அமலாக்க நடவடிக்கையின் வாயிலாக தீவிரமாக கண்காணிக்கும் அணுகு முறையை சிலாங்கூர் அரசு கடைப்பிடிக்கும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
குறைந்த பட்ச சம்பள முறைக்கு அப்பாற்பட்ட நிலையில் சிறு,குறு, நடுத்தர தொழில்துறையினருக்கும் உதவும் வகையில் சிலாங்கூர் அரசாங்கம் தனது ஆதரவை வழங்கும் என்பதையும் பாப்பாராய்டு தெரிவித்தார்..
தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள முறையை அமல்படுத்துதை உறுதி செய்வதற்கு அவர்களுக்கு எல்லா நிலைகளிலும் சிலாங்கூர் அரசு தனது ஆதவை வழங்கி வரும் என்று இன்று ஷா ஆலாமில் சிலாங்கூர் மாநில சட்டமன்றக்கூட்டத்தில் உரையாற்றுகையில் பாப்பாராய்டு இதனை குறிப்பிட்டார்.








