கோலாலம்பூர், பிப்ரவரி.11-
தேசிய அளவிலான அரசியலில் தான் இல்லை என்றாலும் கூட, தொடர்ந்து அம்னோவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருவதாக முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அம்னோ துணைத் தலைவருமான சப்ரி யாக்கோப், Bera நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து கடமையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், அடுத்த பொதுத் தேர்தலில் Bera தொகுதியைத் தக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, தான் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் காலக் கட்டத்தில் பெற்றோரை இழந்த 1000 குழந்தைகளுக்கு உதவி செய்வதை இலக்காகக் கொண்டு தற்போது செயல்பட்டு வருவதாகவும் சப்ரி யாக்கோப் விவரித்தார்.
கடந்த 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரை, அம்னோ துணைத் தலைவராகப் பதவி வகித்த சப்ரி யாக்கோப், 15-வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு கட்சியின் உயர்மட்ட தலைமைப் பதவிகளுக்குப் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








