கோலாலம்பூர், மார்ச்.25-
ஊழல் அல்லது முறைகேடுகளில் ஈடுபடும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எந்தவொரு கட்சி உறுப்பினரையும் கட்சி ஒரு போதும் பாதுகாக்காது என்று அக்கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இன்று 219-ஆவது போலீஸ் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கொள்கைப்படி, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
10 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு புகாரில் பிகேஆர் கட்சி உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில், போலீஸ் துறை மற்றும் அமலாக்கத் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் டத்தோ ஃபாமி உறுதி அளித்தார்.
"மறைப்பதற்கு எங்களிடம் எதுவுமில்லை; சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.








