அலோர் ஸ்டார், ஜனவரி.06-
பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகள் அல்லது இரண்டு முழுத் தவணைகளாகக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் திட்டத்திற்குப் பதிலளித்துள்ள கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமது சனுசி முகமது நோர், பதவிக் காலத்தை விட ஒரு தலைவரின் சேவைத் திறனே மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பிரதமர் சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மைகளைக் கொண்டு வரும் பட்சத்தில், அவர் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.
ஒரு தலைவர் திறமையானவராக இருக்கும் போது, சட்டத்தின் மூலம் அவரது பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்துவது நாட்டிற்கு இழப்பைத் தரும். "ஒருவர் 40 வயதில் பிரதமராகி, சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில், அவரை 10 ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்புவது முறையல்ல" என்று அவர் உதாரணம் காட்டினார்.
அதே வேளையில், ஒரு பிரதமர் சரியாகச் செயல்படவில்லை என்றால், அவரது தவணை முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் அவரை முன்னரே நிராகரிக்கலாம். ஆனால், திறமையானவர்களுக்குத் தடையாகச் சட்டம் இருக்கக்கூடாது என்று சனுசி வாதிட்டுள்ளார்.








