புத்ராஜெயா, மே.05-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், ஒற்றுமை அரசாங்கத்தில் தங்களது ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணிக் காக்க, அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இதன் மூலம், மாநிலத்தின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றின் மீதான தங்கள் உறுதிப்பாட்டை அவை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி ஆகியோர் இணைந்து தலைமை தாங்கிய ஆலோசனைக் கூட்டமானது புத்ராஜெயாவில் இன்று மாலை நடைபெற்றது.
அக்கூட்டத்திற்குப் பிறகு, இந்த முடிவானது எடுக்கப்பட்டதாக பக்காத்தான் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ஃராப் வாஜ்டி டுசுகி ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில், மாநில அரசாங்கத்தில் எடுக்கப்படும் சர்ச்சைக்குரிய முடிவுகள் எதுவாக இருந்தாலும் அவை உடனடியாக அம்னோ– பக்காத்தான் ஹராப்பான் தலைமை ஆலோசனைக் குழுவிற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற புதிய செயல்முறையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
கடந்த வாரம், 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹாருனுக்கான தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றதால் ஏற்பட்ட அரசியல் பரபரப்பைத் தொடர்ந்து இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.








