நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பாரிசான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என்றும், அது இறுதியில் டைட்டானிக் கப்பலைப் போல் மூழ்கும் என்றும் ஜசெக துணைப் பொதுச் செயலாளரும் கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான ஹன்னா யோ விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்துள்ள அவர், பாரிசான் - பெரிக்காத்தான் கூட்டணியைக் கண்டு பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அக்கூட்டணியானது துரோகமும், விசுவாசமற்றவர்களின் செயல்பாடுகளாலும் நிரம்பியுள்ளதாகவும் ஹன்னா இயோ குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளையில், அக்கூட்டணியை டைட்டானிக் திரைப்படத்தில் வரும் கப்பலுடன் தாம் ஒப்பிடுவதாகவும், தொடக்கத்தில் அந்தக் கப்பல் மிகுந்த ஆரவாரத்துடன் புறப்பட்டாலும், இறுதியில் மிகப்பெரிய பனிப்பாறையுடன் மோதிச் சிதைவதையும் ஹன்னோ சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், பாரிசான், பெரிக்காதான், இரு தரப்பினரும் பிரதமர் பதவியை அடைவதையே இலக்காகக் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள ஹன்னா இயோ, அந்த நோக்கத்திற்காக ஒருவரை ஒருவர் மிதித்துச் செல்லவும் தயங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.








