கோலாலம்பூர், நவம்பர்.21-
பெரிக்காத்தான் நேஷனலின் எதிர்க்கட்சித் தலைவராக டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் நீடிப்பார் என்று அந்தக் கூட்டணியின் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் இன்று அறிவித்துள்ளார்.
லாருட் எம்.பி.யான ஹம்ஸா ஸைனுடினுக்குப் பதிலாக எதிர்க்கட்சியின் புதியத் தலைவராக புத்ராஜெயா எம்.பி. ரட்ஸி ஜிடின் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்ட ஆருடத்தை முகைதீன் மறுத்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் 16 ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராக வரும் வேளையில் அக்கூட்டணியில் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் உச்சமன்றத்தின் முடிவுகளாக மட்டுமே இருக்கும் என்று பெர்சத்து கட்சியின் தலைவரான முகைதீன் குறிப்பிட்டார்.
உச்சமன்றத்தின் முடிவின்படி ஹம்ஸா ஸைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார் என்று முகைதீன் தெரிவித்தார்.








