கோலாலம்பூர், மே.03-
மலேசியாவின் 16-ஆவது பொதுத் தேர்தலை மலாக்கா, ஜோகூர் மாநிலத் தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த முடிவு, அந்தந்த மாநில ஆட்சியாளர்களையும் அரசியல் சூழலையும பொறுத்தே அமையும் எனத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மலாக்கா, ஜோகூர் மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல்களைத் தனித்தனியாக நடத்துவதால் ஏற்படும் கூடுதல் செலவுகளைத் தவிர்க்க ஒரே நேரத்தில் நடத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்னோவின் 80-ஆவது ஆண்டு விழாவையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தேசிய முன்னணியும் அம்னோவின் தேர்தல் இயந்திரங்களும் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும், கட்சி உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே வெற்றியை உறுதிச் செய்யாது என்பதால், கட்சி சார்பற்ற பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மலாக்கா சட்டமன்றம் வரும் டிசம்பர் மாதத்திலும், ஜோகூர் சட்டமன்றம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் தானாகவே கலைந்து விடும் சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.








