ஜோகூர் பாரு, மே.17-
ஜோகூர் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்று நடைபெறும் கூட்டணி மாநாட்டில், ஜோகூர் பக்காத்தான் ஹராப்பான் மனுவாகச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அக்கூட்டணியின் ஜோகூர் மாநில துணைத் தலைவர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் வெளியிட்டுள்ள தகவலில், தற்போது ஜோகூர் மாநிலத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர் என்றும், மேலும் ஒரு தொகுதி அந்த எண்ணிக்கையை நெருங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி எல்லை மறுசீரமைப்பு கடைசியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது அதை மீண்டும் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பதை விட இது சிறந்த தீர்வாக இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் ஜோகூர் மாநில சட்டமன்றம், மாநில அரசியலமைப்பில் திருத்தம் செய்து, ஐந்து நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க அனுமதி வழங்கியது.
இதன் மூலம் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையானது 61 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








