வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஸ்ரீ தஞ்சுங் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கும் இஸ்லா வாஹ்யுதி சைனுதீன், தாம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு தொடர்பாக அடுத்த மாதம் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று மலேசியத் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி அதிகாரிகள் தம்மைச் சந்தித்தபோது இந்த விவரம் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்த மேல் விவரங்களை இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவதாகவும் இஸ்லா வாஹ்யுதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ தஞ்சுங் சட்டமன்றத் தொகுதியில் இம்முறை ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
சுயேட்சை வேட்பாளர்களான இஸ்லா வாஹ்யுதி சைனுதீன், ஏ. சரவணன், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜி. ராஜசேகரன், பாரிசான் வேட்பாளர் ஏ. அச்சுதன், பெர்சத்து வேட்பாளர் எம். லெவினிஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








