கோலாலம்பூர், மார்ச் 03 –
தொழிலாளர் சட்ட விதிமீறல்கள், கட்டாய உழைப்பு அல்லது நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் முதலாளிகள், இனி வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
குறிப்பாக, அந்நியத் தொழிலாளர்களின் கடவுச்சீட்டுகளை முடக்கிவைப்பது மற்றும் ஊதியம் வழங்காமல் இருப்பது போன்ற சுரண்டல்களை அரசாங்கம் தீவிரமாகக் கருதுவதாகவும், இத்தகைய நடைமுறைகளை ஒழிக்க 1955-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தின் கீழ் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனது அமைச்சு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட டத்தோஸ்ரீ ரமணன், தொழிலாளர் துறையின் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அடையாள ஆவணங்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் ஊதிய நிலுவை போன்ற புகார்களுக்கு உள்ளாகும் முதலாளிகள் மீது சட்டப்பூர்வ வழக்குத் தொடரப்படுவதோடு, அவர்கள் புதிய ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான தகுதியையும் இழப்பார்கள் என்று செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங்கின் கேள்விக்கு டத்தோஸ்ரீ ரமணன் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.








