கோலாலம்பூர், ஜூலை 1-
எந்தவொரு முன் அறிவிப்பும் செய்யப்படாமல் பெட்ரோல் ரோன் 95 எரிபொருளுக்கான உதவித் தொகை திடீரென்று மீட்டுக்கெள்ளப்படும் சாத்தியம் இருப்பதாக பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி அறிவித்து இருப்பது குறித்து அனைத்துலக, வாணிப, தொழில்துறை முன்னாள் துணை அமைச்சர் ஓங் கியான் மிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதவித் தொகை மீட்டுக்கொள்ளப்படும் தேதியை அரசாங்கம் முன்கூட்டியே அறிவிக்க இயலாது என்று அமைச்சர் ரபிஸி ரம்லி, கூறியிருக்கும் வாதத்தை மக்களில் பெரும்பகுதியினர் ஏற்க இயலாது என்று ஓங் கியான் மிங் குறிப்பிட்டுள்ளார்.
டீசலுக்கான உதவித் தொகை மீட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதைப் போன்று பெட்ரோல் ரோன் 95 க்கான உதவித் தொகையை மீட்டுக்கொள்ளும் திட்டம், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
முதலாவதாக, டீசலுக்கான உதவித் தொகை மீட்டுக்கொள்ளப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளிக்கவில்லை என்று ஓங் கியான் மிங்தெளிவுபடுத்தினார். காரணம், டீசலுக்கான உதவித் தொகை மீட்டுக் கொள்வது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2023 ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த போது அறிவித்து விட்டார்.
இரண்டாவது, டீசலுக்கான உதவித் தொகை மீட்டுக்கொள்ளப்பட்டதற்கு நிதி அமைச்சு பல்வேறு காரணங்களை தெரிவித்தாலும் டீசல் விலை உயர்வு, திடீரென்று அறிவிக்கப்பட்ட விதத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஓங் கியான் மிங் சுட்டிக்காட்டினார்.
டீசல் விலை உயர்வினால் மக்களின் எதிர்வினையை கருத்தில் கொண்டு பெட்ரோல் ரோன் 95 எரிபொருளுக்கு உதவித் தொகையை மீட்டுக்கொள்ளும் திட்டத்தில் அரசாங்கம் மிக கவனமாக செயல்படுவது அவசியமாகும் என்று கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை துணை அமைச்சராக ஓங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.








