கோலாலம்பூர், ஜனவரி.16-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் ஒரு போதும் இணைந்து செயல்படப் போவதில்லை என அம்னோ தீர்மானம் நிறைவேற்றி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜசெகவுடன் கூட்டணி அமைத்திருப்பது, "இறைவனின் கட்டளை" என்று அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி Datuk வர்ணித்துள்ளார்.
அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு எதார்த்தமான அணுகுமுறையிலிருந்தே, ஜசெக உடனான தற்போதைய கூட்டணி உருவாகியுள்ளது என்றும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, பொதுத்தேர்தலுக்கு முன்பு, ‘அன்வார் வேண்டாம்; ஜசெக வேண்டாம்’ என்று தான் கூறியிருந்தாலும் கூட, இப்போது ஜசெகவுடன் தமக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பதையும் ஸாஹிட் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதே வேளையில், தற்போதைய அரசாங்கத்தில் ஜசெகவுடன் இணைந்து செயல்படுவது இறைவன் வகுத்த வழி என்று, தற்போது நடைபெற்று வரும் அம்னோ பொதுப்பேரவையின் மத்தியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜசெக உடனான கூட்டணி குறித்து அம்னோ உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுவதையும் ஸாஹிட் நிராகரித்தார்.








