ஜோகூர் பாருவில் வீடுகளின் மீது சிவப்பு சாயம் வீச்சு நடத்துவது மற்றும் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல் விடுத்த சம்பவங்கள் தொடர்பாக, சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி, மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிவப்பு சாய வீச்சு நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் வாடகைதாரர் அண்டை நாட்டில் வாங்கிய கடனுக்காக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 6 சந்தேக நபர்கள் பிடிபட்டனர். கைது நடவடிக்கையின் போது, ஒரு நபர் போலீசாரின் வாகனத்தின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்ற போதிலும், அவர் செராஸ் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டார் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார்.








