சிலாங்கூர், மே 02-
இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர், கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோவை ஆதரித்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எப்போது வேண்டுமானாலும், தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடலாம். இதை PKR கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ஃபாஹ்மி ஃபட்சில் கோடி காட்டியுள்ளார்.
இதற்கு முன்பு, அத்தொகுதியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரியுடன் பிரதமர் பங்கேற்றுள்ளார்.
அத்தொகுதி மக்களின் பிரச்னைகள் அனைத்தையும் பிரதமர் தீவிரமாக ஆராய்ந்துவிட்டதாக கூறிய அவர், அந்த திறந்த இல்ல உபசரிப்பு எப்போது நடத்தப்பட்டது என்பதை விவரிக்கவில்லை.
முன்னதாக, இடைத்தேர்தல்களுக்கான பரப்புரைகளில் நாட்டின் பிரதமர் கலந்துக்கொள்ளும் பாரம்பரியம் இல்லாததால், கோல குபு பாருவுக்கு அன்வார் வருகைப் புரிய மாட்டார் என்பதை தொடர்பு அமைச்சருமான ஃபாஹ்மி ஃபட்சில் மறைமுகமாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.








