மலேசியர்கள் அடையாள அரசியலை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மடானி அரசாங்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுட்டின் நாசுத்தியோ இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
இனம், மதம் என்ற எந்த வேறுபாடும் இன்றி அனைத்து மலேசியர்களும் பயனடையும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதே செயல்பாடு சார்ந்த அரசியலின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அடையாள அரசியல் என்பது வெற்றியாளர் - தோல்வியாளர், நாம் - அவர்கள் என்ற பிரிவை உருவாக்குகிறது.
“ஆனால் செயல்பாடு சார்ந்த அரசியலில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்தி, அனைவரும் அதிக பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே, மடானி அரசாங்கத்தை அதன் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பிடுங்கள்,” என புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை உள்துறை அமைச்சின் மாதாந்திர செயல்பாட்டுக் கூட்டத்தில் சைஃபுட்டின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், மலேசியா எரிபொருள் விலையை நிலைப்படுத்தி, விநியோக பாதிப்புகளிலிருந்து நாட்டை பாதுகாத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகள் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ள நிலையிலும், மலேசியா இந்த நிலைத்தன்மையைப் பேண முடிந்ததற்கு, மடானி அரசாங்கம் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்ததே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








