மலேசியா அனைத்து குடிமக்களுக்கும் சமமாகச் சொந்தமானது என்றும், குடிமக்களின் விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கருத்துகள் தேவையற்ற சர்ச்சைகளை மட்டுமே உருவாக்கும் என்றும் மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
'மலேசிய பூமி மலாய்க்காரர்களுக்கு மட்டுமே' என்ற கெடா மந்திரி பெசார் முகமட் சனுசியின் கூற்று, சீன சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சாடினார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், இத்தகைய இனவாதக் கருத்துகள் தேசிய ஒற்றுமைக்கு உதவாது என்றும், சனுசி உடனடியாகத் தனது கருத்தைத் தெளிவுபடுத்தி தேவையற்ற பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எந்தவொரு தரப்பிலிருந்தும் வரும் இனவாதக் கருத்துகளை மசீச ஆதரிக்காது எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அனைத்து மக்களின் நலன்களின் அடிப்படையில் மட்டுமே மசீசவின் அரசியல் கூட்டணி அமையும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.








