கோலாலம்பூர், ஜூலை.12-
ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்றால் பதவி விலகுவேன் என தாம் கூறியதாக வெளியான தகவலை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் மறுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் முழு தண்டனையை அனுபவிக்காமல் விடுவிக்கப்பட்டால் மட்டுமே பதவி விலகுவேன் என்று தாம் கூறியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
1எம்டிபி விவகாரத்தில், மலேசியர்கள் 51.4 பில்லியன் ரிங்கிட் கடனைச் சுமக்கக் காரணமான நஜிப், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் விடுவிக்கப்பட்டால், அது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நீதித்துறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், அமைச்சரவை உறுப்பினர் பதவியில் இருந்து கட்டாயமாக விலகுவேன் என்றும் ஙா கோர் மிங் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இது தனிப்பட்ட விவகாரம் அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், கொள்கை சார்ந்த நிலைப்பாடு என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்தக் கொள்கையில் தாம் உறுதியாக இருக்கப் போவதாகவும் ஜசெக கட்சியின் துணைத் தலைவருமான ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.








