ஜோகூர் பாரு, ஜூலை.12-
ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட பெர்சாமா கட்சியின் அனைத்து 15 வேட்பாளர்களும் தேர்தல் டெபாசிட்டை இழந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஃபிஸி இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பெர்சாமா வேட்பாளர்கள் சராசரியாக 3 முதல் 6 சதவிகிதம் வரை மட்டுமே வாக்குகளைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்சமாக 12.5 சதவிகித வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் திரும்பக் கிடைக்கும் என்ற நிலையில், அந்த அளவை எவரும் எட்டாததால், பெர்சாமாவின் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
மேலும், டெபாசிட் இழப்பைத் தவிர்ப்பதுடன், குறைந்தபட்சம் 15 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும் என்ற கட்சி நிர்ணயித்த இலக்கையும் எட்ட முடியவில்லை என்றும் ரஃபிஸி குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட ஆய்வுகளின்படி, பல்வேறு வயதினர் மற்றும் இனத்தவர்கள் மத்தியில் பாரிசான் நேஷனலுக்கு ஆதரவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








