ஜோகூர் பாரு, ஜூலை.12-
ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில், அக்கூட்டணிக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நிறைவடைந்த நிலையில் இனி அனைவரும் ஒன்றிணைந்து வளமான, முன்னேற்றமான ஜோகூரை உருவாக்குவதற்காக செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் சிறந்த முறையில் சேவை செய்யும் வகையில் பாரிசான் நேஷனல் தனது பொறுப்புகளை நிறைவேற்றும் என தாம் நம்புவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஜோகூரின் வளர்ச்சிக்கான கூட்டரசு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தொடரும் என்றும், மாநிலத்தின் மேம்பாட்டு திட்டங்களை மேலும் வலுப்படுத்தி, மக்களின் நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் அன்வார் உறுதியளித்துள்ளார்.
மேலும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய ஜோகூர் வாக்காளர்களுக்கும், தேர்தல் முழுவதும் அயராது உழைத்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் மேற்பார்வையாளர்களுக்கும் அன்வார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்து, அவர்களின் பிரச்சினைகளை முன்வைத்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மொத்தம் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவற்றில், ஜசெக 6 தொகுதிகளிலும், பிகேஆர் மற்றும் அமானா கட்சிகளானது தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் உள்ள 56 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.








