கடந்த 10 ஆண்டுகளாக திரங்கானு மாநில பெர்சாத்து கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ரஸாலி இட்ரிஸ், அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
எனினும், தனது ராஜினாமாவிற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி, தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசீனுக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், அந்த ராஜினாமாவை ஏற்கலாமா அல்லது நிராகரிக்கலாமா என்பது குறித்து கட்சித் தலைமையகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ரஸாலி இட்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாராங் தொகுதி பெர்சாத்து தலைவராக தாம் வகிக்கும் பதவியிலிருந்தும் வரும் செப்டம்பர் மாத மையப் பகுதியில் விலகவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மாநிலத் தலைவர் மற்றும் பிரிவு தலைவர் பதவிகளிலிருந்து மட்டுமே விலகுவதாகவும், கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து நீடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.








