கோலாலம்பூர், ஜூன்.07-
ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஜசெக கட்சி மொத்தம் 17 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் ஜசெக மொத்தம் 14 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக மூன்று புதிய தொகுதிகளில் களம் காணவுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி லோக், கடந்த 2022-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற 10 தொகுதிகளையும் ஜசெக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு போட்டியிடும் என்றும், அப்போது தோல்வியடைந்த நான்கு தொகுதிகளான பெகோக், யோங் பெங், பாலோ மற்றும் பெக்கான் நாநாஸ் ஆகியவற்றில் மீண்டும் வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இதற்கு முன்பு போட்டியிடாத மூன்று புதிய தொகுதிகளிலும் ஜசெக களம் காணவுள்ளதாகவும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதனுடன் தொடர்புடைய மற்றொரு தொகுதி குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அந்தத் தொகுதி தொடர்பான முடிவு பிகேஆர் மற்றும் அமானா கட்சிகளுக்கிடையிலான ஆலோசனைகள் முடிந்த பின்னர் அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








