கோலாலம்பூர், ஜூன்.07-
பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்குள் பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளுக்கிடையேயான எதிர்கால அரசியல் உறவு குறித்து நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளார்.
இன்று கோலாலம்பூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் ஈரான் – இஸ்ரேல் போர் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இறைவன் அருளால் நாளை, திங்கட்கிழமை இரவு, நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவானது, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் எதிர்கால அரசியல் திசையை நிர்ணயிக்கும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த மாதம் மாராங், Rusila-வில் நடைபெற்ற சொற்பொழிவு ஒன்றில் கலந்து கொண்ட ஹாடி அவாங், பெர்சாத்துவுடனான கூட்டணியை பாஸ் கட்சி மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அடுத்த பொதுத் தேர்தலில் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான அக்கூட்டணியின்றி, பாஸ் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் அம்னோவுடன் இணைந்து செயல்பட பாஸ் கட்சிக்கு அம்னோ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








