கூலிம், நவ.9-
மக்களின் பிரச்சனைகளையும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதோடு அவர்களுடன் நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காகவே பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தோற்றிவிக்கப்பட்ட நிகழ்வே SUA MESRA RAKYAT என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் புகழாரம் சூட்டினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் வட்டாரம் மற்றும் கிராமங்கள் தோறும் இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது . கெடாவில் மட்டும் இதுவரை 7 நிகழ்வுகள் மக்களுடன் இணந்து செயல்படுத்தப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சின் கீழ் நடைபெறும் இந்நிகழ்வை மலேசிய காவல் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து மக்களைச் சந்திக்கும் சமயத்தில் பல வித குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பெறுவதாக சைபுடின் குறிப்பிட்டார்.
தவிர அடையாள ஆவண விவகாரம், குடியுரிமை மற்றும் சிவப்பு அடையாள கார்டு பிரச்சனைகளும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரப்படுவதாக அமைச்சர் விளக்கினார்..
இன்று கூலிம் தேசிய வகை லாடாங் டப்ளின் தோட்ட பள்ளியில் நடைபெற்ற SUA MESRA RAKYAT எனும் நிகழ்வில் கலந்து கொண்ட சைபுடின் தமது உரையில் இதனை தெரிவித்தார்.

நாட்டின் குடியுரிமைத் தொடர்புடைய தகவல்களை சரியாக விளக்க வேண்டுமே தவிர தவறான புள்ளி விவரங்களை மக்களிடம் சேர்க்க வேண்டாம் என்றும் சைபுடின் நினைவுறுத்தினார்.
நாட்டிலுள்ள மூவின மக்களும் நண்பர்கள் ஆவர். இன பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம். மத, இன பிரச்சனைகளை எழுப்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு சைபுடின் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஐந்து குடும்பங்களுக்கு குடியுரிமை பத்திரங்கள் , ஏழ்மையான குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை முதலியவற்றை சைபுடின் வழங்கினார்.
செய்தி & படம் : ஹேமா எம்.எஸ்.மணியம்








