போர்ட்டிக்சன், ஜூலை.19-
நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசாரும், லிங்கி தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருமான டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹரூன், பெரிய அளவிலான பிரசாரங்களை விட சிறிய குழுவுடன் மக்களை நேரடியாக சந்திக்கும் முறையை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்த அணுகுமுறையை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் வாக்காளர்களின் உண்மையான தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
லிங்கி தொகுதியில் வாழும் இந்திய சமூகத்தினரை இன்று சந்தித்து உரையாடிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமினுடின், மக்கள் கருத்துகளை நேரில் கேட்பதே தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டார்.
மேலும், லிங்கி தொகுதியானது பாரம்பரியமாக பாரிசான் ஆதிக்கம் கொண்ட தொகுதியாக இருந்தாலும், மக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு தனக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தற்போது இடைக்கால மந்திரி பெசார் பதவியில் இருப்பது வெற்றிக்கான உத்தரவாதம் அல்ல என்பதை சுட்டிக் காட்டியுள்ள அமினுடின், மக்களின் நம்பிக்கையே முக்கியம் என்றும் விவரித்துள்ளார்.
இந்நிலையில், லிங்கி தொகுதியில் Aminuddin-ஐ எதிர்த்து பாரிசான் வேட்பாளர் Mohd Faizal Ramli மற்றும் Bersatu வேட்பாளர் Zamri Md Said ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அத்தொகுதியில் மொத்தம் 20 ஆயிரத்து 677 வாக்காளர்கள் உள்ள நிலையில், மாநிலத் தேர்தலுக்கான வாக்குப் பதிவானது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








