கோலாலம்பூர், ஜூலை.19-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடனான அரசியல் ஒத்துழைப்பு காரணமாக பாரிசான் அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு விடுத்த அழைப்புக்கு, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சபா மாநிலத் தேர்தலில் ஷாஃபி அப்டால் தலைமையிலான வாரிசான் கட்சி, பாரிசான் நேஷனலுக்கு எதிராகப் போட்டியிட்டதால், அக்கூட்டணியும் ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேற, பக்காத்தான் இளைஞர் பிரிவு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அக்மால் தெரிவித்துள்ளார்.
மேலும், சரவாக் மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் GPS கட்சியானது பாரிசான் நேஷனலுக்கு எதிராகப் போட்டியிட்டால், அந்தக் கட்சியும் கூட்டரசு அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற இதே கோரிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்ய இயலாவிட்டால், பாரிசான், Warisan மற்றும் GPS கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களையும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதற்கான சவாலை ஏற்குமாறும் அக்மால் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.








