கோத்தா பாரு, பிப்ரவரி 26 -
தேர்தல் சீர்திருத்தங்களை கோரும் இயக்கமான பெர்சே, நாளை செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் மாநகரில் நடத்தவிருக்கும் பேரணி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஒரு தொடக்கமாகும் என்று பாஸ் கட்சி கூறுகிறது.
அதேவேளையில் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், ஒரு தவணை காலத்தை நிறைவு செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று எதிர்பார்க்கப்படுவதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
அன்வாரும், அவரின் தலைமையிலான அணியினரும் எதிர்பார்த்த சீர்திருத்தங்களை அமல்படுத்த தவறிவிட்டனர் என்றே பெர்சே கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பானின் தீவிர ஆதரவாளரான பெர்சே, தனது எதிர்ப்பு நடவடிக்கையை அந்த கூட்டணிக்கு எதிராக திருப்பியுள்ளது என்றால் அன்வாரின் ஒற்றுமை அரசாஙகம் வீழ்த்தப்படுவதற்கு ஒரு தொடக்கமாகும் என்று துவான் இப்ராஹிம் துவான் மான் கூறுகிறார்.








