சிலாங்கூர் மாநில 22 எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிக விரைவில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
தங்கள் தொகுதி மேம்பாட்டிற்கு தலா 50 ஆயிரம் வெள்ளியை மாநில அரசு வழங்கும் என அவர் கூறினார்.
தாம் வாய்மொழியாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அவர்களிடம் இருந்து இன்னும் விண்ணம் வரவில்லை. எனவே, தம்மை அவர்கள் நேரில் சந்தித்து இவ்விவகாரம் குறித்து கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டுக்கான இந்த நிதி ஒதுக்கீட்டை தேவையின் காரணமாக முன்னதாகவே கொடுப்பதாகவும், அதனை அவர்கள் திட்டமிட்டு மக்கள் நலனுக்காகச் செலவிடுவர் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதே சமயம், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டை முடிவு செய்ய ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.







