ஷா ஆலாம், புக்கிட் ஜெலுத்தோங் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் உட்பட 23 பேரைச் சந்தித்து, அவர்களின் தற்போதைய தகவல்களைச் சரிபார்க்கும் பணிகளைச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு மேற்கொண்டுள்ளார்.
'சைம் டார்பி பிராப்பர்டீஸ்' (Sime Darby Properties) மேம்பாட்டு நிறுவனத்தின் இறுதி ஒப்புதலுக்கு முன்னதாகத் தேவைப்படும் ஒரு முக்கியப் பகுதியாக இந்தச் சந்திப்பு அமைந்தது. இந்தச் சரிபார்ப்பு செயல்முறையானது மிகவும் வெளிப்படையான முறையிலும், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வாரிசுகளின் நலன்களைக் கருத்தில் கொண்டும் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்று பாபாராய்டு குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வதில் சிலாங்கூர் மாநில அரசு எப்போதும் உறுதியாக இருப்பதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார்.
அதே வேளையில், யாருடைய உரிமைகளும் நலன்களும் புறக்கணிக்கப்படாமல், சீரான முறையில் மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதையும் அரசு உறுதி செய்யும் என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்றும் பாபாராய்டு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.








