பினாங்கில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்தும் போக்கு அதிகரித்து வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் மொகிதின் அப்துல் காதர், பினாங்கு அரசு மருத்துவமனை அமைந்துள்ள ரெசிடென்சி சாலை மற்றும் Leboh Pasar போன்ற இடங்களில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். மஞ்சள் கோடு உள்ள இடங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பாதசாரிகளுக்கும் ஆபத்து விளைவிப்பதாக அவர் கூறினார்.
மேலும், பொது கார் நிறுத்துமிடங்களை நாற்காலிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு ஆக்கிரமிக்கும் சட்டவிரோத செயல்களும் அதிகரித்துள்ளன. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, மாநகர் மன்றம் மற்றும் போலீஸ் துறை இணைந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என மொகிதின் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.








