நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக பாரிசான் நேசனல் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூகம், மதம், கிராமப்புற சுற்றுலா மற்றும் ஒராங் அஸ்லி மக்களின் தேவைகள் என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒன்பது முக்கியத் துறைகளைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் எதிர்கால நலனை மேம்படுத்தும் வகையில் பல சிறப்பான திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐம்பதாயிரம் வேலைவாய்ப்புகள் மற்றும் ஐயாயிரம் உயர் வருமான வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற திட்டங்கள் பட்டதாரிகளுக்கும் இளைய தலைமுறையினருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலச் சூழலுக்கேற்பவும், 'ஜென் இசட்' தலைமுறையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு இந்த அறிக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் அறிக்கை வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வழிவகை செய்யும் என்று அம்னோ மாநிலத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் மற்றும் இதர வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பாரிசான் நேசனல் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், நெகிரி செம்பிலான் மாநிலம் மேலும் பல வளர்ச்சியைக் கண்டு சிறப்பான எதிர்காலத்தைப் பெறும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.








