மலேசியாவின் பன்முகத்தன்மையையும், நீண்டகாலமாகப் பேணப்படும் இன நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் பரப்பப்படும் இனவாதத் தூண்டல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மடானி அரசாங்கத்தின் சாதனைகளைத் திசைதிருப்ப, சில சுயநலக் கும்பல் இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி 33 மில்லியன் மக்களின் எதிர்காலத்தைப் பணயம் வைப்பதாக அவர் எச்சரித்தார்.
இன்று புத்ராஜெயாவில் பேரா, திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த PKR தொகுதிப் பொறுப்பாளர்களை சந்தித்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இதனை தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்தன் பொருளாதாரச் சாதனைகளில் 2025 ஆம் ஆண்டு 426.7 பில்லியன் ரிங்கிட் முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 2.4 லட்சம் தரமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதையும் டத்தோஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் STR, SARA நிதியுதவிகள் மற்றும் ஒரு ரிங்கிட் 99 சென் விலையிலான BUDI95 பெட்ரோல் மானியம் ஆகியவை சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க நேரடியாகப் உதவுகின்றன.
மேலும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையை அமைதியைக் குலைக்கப் பயன்படுத்தக் கூடாது. 3R விவகாரங்களைத் தூண்டுவோர் மீது அரசாங்கம் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் டத்தோஸ்ரீ ரமணன் தெளிவுபடுத்தினார்.









