பினாங்கு, ஜூன் 22-
மலேசியாவில் எதிர்காலத்தில் ஒரு சிறந்த அரசியல் தலைவராக உருவாகுவதற்கு அவர் கொண்டுள்ள கல்வித் தகுதி ஓர் அளவுக்கோல் அல்ல என்று கெடா மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் தலைமை இயக்குநருமான டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி முகமது நோர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் உயர்ந்த கல்வித் தகுதியை கொண்டிருக்கவில்லை. ஆனால் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கக்கூடிய ஆற்றலையும், திறமையையும் அவர்கள் கொண்டுள்ளனர் என்று சனூசி விளக்கினார்.
வரும் ஜுலை 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பினாங்கு சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் பாஸ் கட்சியைச் சேர்ந்த ஆபிதீன் இஸ்மாயில் போதுமான கல்வித் தகுதியை கொண்டிருக்கவில்லை என்றும் வெறும் மார்க்க கல்வியை மட்டுமே கொண்டுள்ளார் என்றும் கூறப்படுவது தொடர்பில் சனூசி எதிர்வினையாற்றினார்.








