கோலாலம்பூர், மார்ச்.02-
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் நீடிப்பதற்கு, பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை பெர்சத்து கட்சியின் கொறடா டத்தோ ஶ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமை கொறடா டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசானிடம் சமர்ப்பித்துள்ளார்.
பிப்ரவரி 24-ஆம் தேதியிட்ட அந்த கடிதத்தில், நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 4A-இன் கீழ், பெரும்பான்மை மற்றும் கூட்டு முடிவின் அடிப்படையில் ஹம்ஸா ஸைனுடினைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நிலைநிறுத்த 13 உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் மாற்றப்படுவார் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.








