கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தாம் பேசிய கருத்துகள், அரசியல் ஆதாயத்திற்காகச் சில தரப்பினரால் வேண்டுமென்றே திரிக்கப்பட்டுள்ளதாகப் பெரிகாத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனர் முகமட் சனுசி நோர் தெரிவித்துள்ளார்.
வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலேயே தாம் பேசியதாகவும், இதனைத் தவறாகச் சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
'மலாயா பூமி' என்பது மலாய்க்காரர்களின் தாயகம் மட்டுமே என்று சனுசி பேசியதாகக் கூறி, ஜசெக, உள்ளிட்ட கட்சிகள் அவருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன. தன் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, சுய விளக்கமளித்து சர்ச்சையாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட கெடா மந்திரி பெசார் சனுசி, தமக்கு எதிராகப் புகார் அளிப்பவர்கள் மீது போலீசில் எதிர் புகார் அளிக்கப்படும் என்றும் கூறினார்.








