கோலாலம்பூர், பிப்ரவரி.14-
பெர்சத்து கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்டதை எதிர்த்து டத்தோ ஶ்ரீ ஹம்சா ஸைனுடின் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற "Reset" என்ற தலைப்பிலான சிறப்பு விளக்கக் கூட்டத்தில் பேசிய லாரூட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்ஸா, "நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன், எனவே நான் கட்சியை விட்டு வெளியேறுகிறேன். இதற்காக நான் ஒருபோதும் மேல்முறையீடு செய்ய மாட்டேன். கட்சிக்காக நான் போராடியது பெரும் தியாகம் தேவைப்பட்ட ஒரு பணி. கட்சிக்கு இனி நான் தேவையில்லை என்றால், பெர்சத்துவுக்கு எனது பிரியாவிடைகள்," என்று பெர்சத்துவின் அந்த முன்னாள் துணைத் தலைவர் கூறினார்.
மேலும், பெர்சத்து தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினை தனது முதன்மை எதிரி என்றும் அவர் வர்ணித்தார். "எனது போராட்டங்கள் எப்போதும் கட்சிக்காகவே இருந்தன. ஆனால் இப்போது எனது முதல் எதிரி டான் ஶ்ரீ முகைதீன்," என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை தன்னிடம் விளக்கம் கேட்கப்படாமல் மேலும் 16 உறுப்பினர்களுடன் சேர்த்து நீக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் தமக்குத் தெரியவில்லை என்று ஹம்ஸா உரிமை கோரினார். "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்காக இன்று நான் நீக்கப்பட்டுள்ளேன்," என்று அவர் மேலும் கூறினார்.








