கோலாலம்பூர், மே.02-
அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை நோக்கிய பயணமானது, இளைய தலைமுறையினரை அது எந்த அளவுக்குச் சரியாகப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு அதிகாரமளிக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அடுத்த இருபது ஆண்டுகளில் இன்றைய இளைஞர்களே நாளைய அம்னோவை வடிவமைக்கவுள்ளார்கள் என்றும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அம்னோவின் 80-ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய ஸாஹிட், இன்னும் 20 ஆண்டுகளில் அம்னோ 100-ஆம் ஆண்டை எட்டும் நிலையில், கட்சியின் எதிர்கால பாதையை தீர்மானிப்பவர்கள் இன்றைய இளைஞர்களே என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில், காலம் கடந்து செல்வது தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ள ஸாஹிட், அது தலைமுறைகள் அனைத்தின் மீதும் ஒரு கூட்டுப் பொறுப்பைச் சுமத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமுறைகளுக்கிடையிலான ஒற்றுமை பரஸ்பர அக்கறை மற்றும் மரியாதையால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூத்தவர்கள் இளைஞர்களை கவனிக்க வேண்டும், அதே போல் இளைஞர்கள் மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்பதே தமது கொள்கை என்றும் ஸாஹிட் தமது உரையில் தெரிவித்துள்ளார்.








