வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த வாக்காளர்களில் மொத்தம் 12 ஆயிரத்து 710 பேர் நாளை ஜூலை 7-ஆம் தேதி தங்களது முன்கூட்டியே வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர்.
இது குறித்து ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்த வாக்காளர்களில் 12 ஆயிரத்து 67 பேர் முன்கூட்டியே வாக்களிக்க உள்ளதாகவும், 643 பேர் அஞ்சல் வாக்கு மூலம் வாக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் 64 முன்கூட்டியே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 53 வாக்குச்சாவடிகள் அரச மலேசிய போலீஸ் படையினருக்காகவும், 11 வாக்குச்சாவடிகள் மலேசிய ஆயுதப்படையினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அப் ரஹ்மான் அர்சாத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள 3 ஆயிரத்து 565 போலீஸ் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 647 அதிகாரிகள், 2 ஆயிரத்து 806 கீழ்நிலை போலீஸ் உறுப்பினர்கள் மற்றும் 112 சிவில் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்கூட்டியே வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், தேர்தல் நடவடிக்கை கட்டுப்பாட்டு அறைகளில் பணியாற்றுதல் மற்றும் தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யும் பொறுப்புகளை இந்த போலீஸ் பணியாளர்கள் மேற்கொள்வார்கள் என்றும்அப் ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.








