கோயில்களை இடிக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து சட்டத்துறை தலைவரான அட்டர்னி ஜெனரல் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என இலக்கவியல் அமைச்சரும், ஜசெக தேசியத் தலைவருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
வழிபாட்டுத் தலங்களின் நில விவகாரங்களை அமைதியான முறையில் தீர்க்க மாநில அரசுகள் முறையான வழிமுறைகளை வைத்துள்ளன. இருப்பினும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கோயில்களை இடிக்கப் போவதாக மிரட்டல் விடுப்பவர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டும், சட்டத்துறை தலைவர் அலுவலகம் மௌனம் காப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இது குறித்து தாம் பலமுறை அமைச்சரவையில் பேசியுள்ளதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார். ஆனால், ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் சட்டத்துறை தலைவரிடமே உள்ளது. இந்தத் தாமதத்திற்கான காரணம் என்ன என்பதையும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சட்டத்துறை அலுவலகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவர் விளக்க வேண்டும்," என கோபிந்த் சிங் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








