கோலாலம்பூர், நவம்பர்.04-
அமெரிக்காவுடன் மலேசியா செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம், நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்திற்கோ, அல்லது தன்னாட்சி உரிமைக்கோ முரணானது அல்ல என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திதிற்கு உட்பட்டே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. மலேசியா செய்து கொள்ளக்கூடிய எந்தவொரு ஒப்பந்தமும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இருப்பதை உறுதிச் செய்வதில் சட்டத்துறை அலுவலகம் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கக்கூடிய விவாதங்கள் மற்றும் முடிவுகள், பின்னர் சட்டத்துறை அலுவலகத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்னூட்டம் பெறப்படுகிறது என்று இன்று நாடாளுமன்றத்தில் பெரிக்காத்தான் நேஷனல் கோத்தா பாரு எம்.பி. டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் அன்வார் தலைமையிலான அரசாங்கம் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறியச் செயலாகும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது நேற்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அந்த ஒப்பந்தங்கள் நாட்டின் இறையாண்மையையும், மலாய் ஆட்சியாளர்களின் அஸ்தஸ்தையும் பாதிக்கிறது என்று துன் மகாதீர் குறிப்பிட்டு இருந்தார்.
மலேசியா கிட்டத்தட்ட 150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்காவின் பொருட்களை வாங்க வேண்டும். அதில் முக்கியமாக 30 போயிங் விமானங்கள் மற்றும் 3 பில்லியன் டாலர் அளவிலான எரிவாயுவை ஒவ்வோர் ஆண்டும் வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அந்த ஒப்பந்ததில் இடம் பெற்றுள்ளது என்று துன் மகாதீர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த ஒப்பந்தங்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அன்வார் பதவி விலக வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த அன்வார், தம்மை பதவி விலகும்படி எத்தனை முறைதான் வலியுறுத்திக் கொண்டு இருப்பது என்று வினவியதுடன் துன் மகாதீரின் பெயரைப் பயன்படுத்தாமலேயே இத்துடன் போதும் என்றார்.








