பாரிசான் நேஷனல் கூட்டணி, மாநில அரசாங்கங்கள் அளவில் பக்காத்தான் ஹராப்பானுடன் எந்தவோர் அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தையும் செய்து கொள்ளவில்லை என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அகமட் மஸ்லான் கூறியுள்ளார். இதன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய அரசியல் உத்திகளைப் பயன்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பேரா, மஞ்சோங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஜொகூரில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டோம். நெகிரி செம்பிலானிலும் ஒற்றுமை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் இல்லாததால், நாங்கள் பெரிகாத்தான் நேஷனலுடன் இணைந்து செயல்படுகிறோம். இதே போல சரவாக் மற்றும் மலாக்காவிலும் பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணியுடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இருப்பினும், பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மத்திய அரசாங்க அளவில் மட்டுமே செல்லுபடியாகும் என்றும், தற்போதைய நாடாளுமன்றப் பதவிக் காலம் முடியும் வரை மத்தியிலுள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாரிசான் நேஷனல் தனது முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் பொதுப்பணித்துறை துணை அமைச்சரமான அகமட் மஸ்லான் தெளிவுபடுத்தியுள்ளார்.








