கோலாலம்பூர், அக்டோபர்.15-
டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது என்று ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் வர்ணித்துள்ளார். பெரிக்காத்தான் நேஷனலுக்குத் தலைமையேற்றுள்ள பெர்சத்து கட்சி தற்போது பிளவின் உச்சத்தில் இருப்பதாக வூ கா லியோங் குறிப்பிட்டுள்ளார்.
வருகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அதன் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினை அக்கட்சி முன்மொழிந்த போதிலும் அவரை வீழ்த்துவதற்கு நூற்றுக்கு மேற்பட்ட டிவிஷன்கள் சத்தியப் பிரமாண கடிதத்தில் கையெத்திட்டு அனுப்பியுள்ளன. இதன் காரணமாக சம்பந்தப்பட்டவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று வூ கா லியோங் தெரிவித்தார்.
இந்நிலையில் பெரிக்காத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பலருக்கு தெரியும். ஆனால், அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க விரும்பவில்லை என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் நேற்று தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கோ எதிர்க்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளரின் பெயரை அறிவிப்பது என்பது அவர்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காரணம், அவர்களின் வாகனத்தில் லஞ்சப் பணமோ, தங்கக் கட்டிகளோ அல்லது போதைப் பொருளோ வைக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள எதிர்க்கட்சியினர், செயலிழந்து, இன மற்றும் மத உணர்வுகளில் தீவிரம் காட்டுவதால் அந்த கூட்டணியால் கொள்கை அடிப்படையில் இனி வாதிட முடியாது. தாங்கள் சார்பாக ஒரு பிரதமர் வேட்பாளரின் பெயரைக் கூட அவர்களால் இதுவரை அறிவிக்க இயலவில்லை என்று வூ கா லியோங் தெரிவித்தார்.
இந்நிலையில் பெரிக்காத்தான் நேஷனலில் இணையலாம் என்று கூறப்படும் மசீச.வும், மஇகாவும் தங்கள் சார்பாக பிரதமர் வேட்பாளர் என்று யாரைப் பரிந்துரை செய்வார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
அதே வேளையில் அறியப்பட்ட அல்லது இன்னும் அறியப்படாத பிரதமர் வேட்பாளரை மசீச.வும் மஇகாவும் ஆதரிப்பாளர்களா? என்பதும் உறுதியாகத் தெரியவில்லை என்று வூ கா லியோங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.