ஜசெக-வின் பொதுச் செயலாளராக அந்தோணி லோக் தொடர்ந்து நீடிப்பதற்கு கட்சியின் மத்திய செயலவை ஒருமனதாக தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் கட்சியின் தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ இதனைத் தெரிவித்தார்.
ஜசெக.வின் நெகிரி செம்பிலான் மாநில தலைவர் பதவிலிருந்து விலகுவதற்கு அந்தோணி லோக் முடிவெடுத்த போதிலும் கட்சியைப் பொறுத்தவரை அவரின் தலைமைத்துவம் கேள்விக்கு இடமற்றது என்று கோபிந்த் சிங் திட்டவட்டமாகக் கூறினார். அந்தோணி லோக் தொடர்ந்து கட்சியை வழிநடத்தி, முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதில் அனைத்து மத்திய செயலவை உறுப்பினர்களும் உடன்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் விளக்கினார்.
கடந்த வாரம் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் ஜசெக.வின் அடைவுநிலை மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க மத்தியச் செயலவையின் இந்த முக்கிய கூட்டம் நடைபெற்றதாக கோபிந்த் சிங் தெளிவுபடுத்தினார்.








