சிரம்பான், ஆகஸ்ட்.01-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி மிகவும் அமைதியான முறையிலும் சுமுகமாகவும் நடைபெற்று வருவதாகப் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்புப் பதிவு, நண்பகல் 12 மணி வரை எவ்விதப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி, பொது அமைதிக்கு குத்தகமின்றி, சுமுகமாக நகர்ந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை இன்று நேரில் பார்வையிட்ட பிறகு சிரம்பான் கிங் ஜார்ஜ் இடைநிலைப்பள்ளி வாக்களிப்பு மைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில போலீஸ் தலைவர் Datuk Alzafny Ahmad – டன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டதாகக் கூறினார்.
மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை உறுதி செய்வதற்காகவும், அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காகவும் மொத்தம் 5,500 போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரையிலான தேர்தல் பிரச்சாரக் காலத்தில், மாநிலம் முழுவதும் தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் புகார்கள் தொடர்பாக மொத்தம் 92 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ முகமட் காலிட் தெரிவித்தார்.
இவற்றில் தீவிரத் தன்மை வாய்ந்த 24 புகார்கள் மீது விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
பெரும்பாலான புகார்கள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் சுவரொட்டிகளை சேதப்படுத்தியது உட்பட தேர்தல் தொடர்புடைய புகார்களே பெறப்பட்டுள்ளன.
எது எப்படி இருப்பினும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி, அமைதியான முறையில் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் மேலும் உறுதியளித்தார்.








