தாபூங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையமான ஆர்.சி.ஐ அறிக்கையை வெளியிட்டது, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கை அல்ல என்று அரசாங்க செய்தித் தொடர்பாளரும், தொடர்புத்துறை அமைச்சருமானஃபஹ்மி பாசில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் முழுமையான ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே அந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அந்த அறிக்கை அமைச்சரவையில் தொடர்ந்து விவாதிக்கப்படுவதற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும் என்றும் ஃபஹ்மி பாசில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தாம் பதவியேற்ற பின்னர், வைப்பாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவகாசம் தேவை என்பதால் அறிக்கையை வெளியிடுவதை ஒத்திவைக்குமாறு தாபூங் ஹாஜி தலைவர் அப்துல் ரஷித் ஹுசைன் கேட்டுக் கொண்டதாகவும் ஃபஹ்மி பாசில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது ஆர்.சி.ஐ-யின் 75 சதவீத பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை மற்றும் அமலாக்க அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய சில பரிந்துரைகள் மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஆர்.சி.ஐ அறிக்கையின் கண்டறிதல்களின் அடிப்படையில் போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பேங்க் நெகாரா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளதையும் ஃபஹ்மி பாசில் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் நிறைவடைந்த இந்த ஆர்.சி.ஐ அறிக்கையானது, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று இரகசிய நீக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
அதில், 2014 முதல் 2020 -ஆம் ஆண்டு வரை தாபூங் ஹாஜியின் நிர்வாகம், முதலீடு மற்றும் நிதி மேலாண்மையில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாக ஆர்.சி.ஐ அறிக்கை கண்டறிந்து, கடுமையான கண்காணிப்பு மற்றும் சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.








