பல்லினச் சமூகங்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிவரும் பரஸ்பர மரியாதையையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் பெரிக்காடன் நேசனல் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் வெளியிட்டுள்ள இனவாதக் கருத்துகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெகிரி செம்பிலானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பலாம் என்பது போன்ற தொனியில் அவர் பேசியது நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் விரோதமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சனுசி நோரின் இத்தகைய கருத்துகள் தற்செயலானது அல்ல என்றும், பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சமீபத்தில் மலேசியர் அல்லாதவர்களை குறி்த்து வெளிப்படுத்திய கருத்தின் தொடர்ச்சியாகவே இதைக் கருத வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்லின இனவாதப் பேச்சுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், இத்தகைய போக்குகள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட்டின் இன நல்லிணக்கம் மற்றும் அமைதிக்குக் பெரும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இத்தகைய சர்ச்சைக்குரிய மற்றும் இனவாதக் கருத்துகளுக்கு எதிராகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய விசாரணைகளைத் தொடங்க வேண்டும் என்றும் ராம்கர்பால் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் காலங்களில் இதுபோன்ற ஆபத்தான கருத்துகள் மீண்டும் பரவுவதைத் தடுக்கவும், நாட்டின் சமூக ஒற்றுமையைப் பாதுகாக்கச் சட்டத்தின் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








