சும்பங்கான் துனை ரஹ்மா எனப்படும் எஸ்டிஆர் உதவித் தொகையின் இரண்டாம் கட்டமானது, நாளை மார்ச் 10-ஆம் தேதி முதல் செலுத்தப்படவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்துள்ளார்.
அதன் படி, நாடெங்கிலும், சுமார் 5.2 மில்லியன் மலேசியர்கள் இந்த உதவித் தொகையைப் பெறவுள்ளனர்.
இந்த முன்கூட்டிய உதவித் தொகையானது, ரமலான் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வரும் மில்லியன் கணக்கான மலேசியர்களுக்கு உதவும் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டத்தை ஒப்பிடும் போது, இரண்டாம் கட்டத்தில் உதவி பெறுவோரின் எண்ணிக்கையானது 5.2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், முதல் கட்டத்தில் வழங்கப்பட்ட உதவித் தொகைக்காக, அரசாங்கம் 1.1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியிருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டத்திற்காக 1.3 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 2 லட்சம் மலேசியர்களும், வரும் மார்ச் 30-ஆம் தேதி முதல் எஸ்டிஆர் உதவித் தொகையைப் பெறவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டாம் கட்ட உதவித் தொகையின் படி, 3.8 மில்லியன் குடும்பங்கள், 1.4 மில்லியன் தனித்து வாழும் மூத்த குடிமக்கள், சுமார் 100 ரிங்கிட் முதல் 600 ரிங்கிட் வரையில், அவரவர் தகுதிக்கு ஏற்ப பெறவுள்ளனர்.
2026 ஆம் ஆண்டிற்கான, STR மற்றும் SARA உதவித் தொகைக்கான அரசாங்கத்தின் மொத்த ஒதுக்கீடு 15 பில்லியனாக ரிங்கிட் ஆகும்.
இது மலேசிய வரலாற்றில், கூட்டரசு அரசாங்கத்தில் ஒதுக்கப்பட்ட அதிகப்பட்ச தொகையாகக் கருதப்படுகின்றது.








