வறுமையற்ற நெகிரி செம்பிலானை உருவாக்குவதில் இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் சாதனைப்படைத்து வருவதாக டாக்டர் ஜி. ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
"நெகிரி செம்பிலான் மாநிலம், வறுமை ஒழிப்பில் மலேசியாவிலேயே புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது!" என ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜி. ராஜசேகரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

"டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் அவர்களின் தலைமையிலான எங்களின் தற்போதைய ஆட்சி, வெறும் வாக்குறுதிகளை மட்டும் தரவில்லை; மாறாக, தரவுகளின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்டு மக்கள் நலனைக் காத்துள்ளது என்று டாக்டர் ராஜசேகரன் குறிப்பிட்டார்.
மலேசியாவிலேயே முதன்முறையாக 2023 முதல் 2026 வரை தொடர்ச்சியாக 'பூஜ்யம் கடுமையான வறுமை' என்ற நிலையை எட்டிய ஒரே மாநிலம் நெகிரி செம்பிலான் மட்டும்தான்! இக்காலகட்டத்தில், ‘இகாசே’ தரவுத்தளத்தின் வழி அடையாளம் காணப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள், முறையான வாழ்வாதார உதவிகள் மூலம் வறுமையிலிருந்து முழுமையாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தற்காலிக உதவி அல்ல; மக்களின் நிரந்தரப் பொருளாதார முன்னேற்றத்திற்கான இலக்கு. ஸ்ரீ தஞ்சோங் மக்கள் தொடர்ந்து இந்த நல்வாழ்வைப் பெற, எங்களின் தரவு சார்ந்த, மக்கள் நல ஆட்சிக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும்!" என டாக்டர் ராஜசேகரன் தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது வீரியத்துடன் முழங்கினார்.










