கோலாலம்பூர், மார்ச்.14-
இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உச்ச மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடிக்குப் பதிலாக பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.
புதிய தலைவரின் பெயர் மார்ச் மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும், முன்னதாக நாடாளுமன்றத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ் கட்சி தனது பிரதிநிதியை தேர்வு செய்யும் வரை லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ ஸைனுடின் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்து பொறுப்பில் இருப்பார் என பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை காலை, கெராக்கான் தலைமையகத்தில் நடைபெற்ற உச்ச மன்றக் கூட்டத்தில் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெரிக்காத்தான் பொதுச் செயலாளராக டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அப்பதவியில் இருந்த டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.








